Ads Header

Pages


15 March 2012

எந்த நோய்க்கு என்ன சாப்பாடு ? கிச்சன் கிளினிக்!

எந்த நோய்க்கு என்ன சாப்பாடு ?

கிச்சன் கிளினிக்!
" 'எந்த நோய்க்கு என்ன சாப்பாடு - கிச்சன் கிளினிக்' என்ற புதிய பகுதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எல்லா நோய்க்கும் சொல்வீர்களா?"

கடந்த இதழில் வெளியான புதிய பகுதி குறித்து வந்து குவிந்த நூற்றுக்கணக்கான கடிதங்களில் ஒரு சாம்பிள் கடிதம்தான் இது. அத்தனை கடிதங்களையும் படித்து முடித்த செஃப் ஜேக்கப், "என்னுடய பொறுப்பு கூடியிருக்கிறது என்பதை உணர்கிறேன். தேடித் தேடி எல்லாவித நோய் மற்றும் குறைபாடுகளுக்கான உணவுகளைக் கொண்டு வந்து நிச்சயமாக வாசகிகளுக்குப் படைப்பேன்" என்றபடியே, உடல் பருமனை (ஒபிஸிட்டி) குறைப்பதற்கான உணவு முறைகளை இந்த இதழிலும் தொடர்ந்தார்.

" 'அதிகாலை இஞ்சி, நண்பகல் சுக்கு, இளம் சூடான தண்ணீர்... இவை முதுமையை நெருங்க விடாது' என்று பேச்சுவாக்கில் சொல்வதுண்டு. பொதுவாக... சுக்கு, உடம்பைக் குறைக்கக்கூடியது. இஞ்சி, கொழுப்பை சூடாக்கி இளக்கும் தன்மை கொண்டது. அதனால்தான் அசைவ உணவில் இஞ்சி கட்டாயமாகச் சேர்க்கப்படுகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

விடிகாலையில் வெறும் வயிற்றில் சூடான வெந்நீரை 5 முதல் 10 டம்ளர் குடித்தால், தொப்பை குறைவதுடன், வயிற்றில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடும்.

ஒபிஸிட்டியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் சிலர், சதா சர்வகாலமும் எதையாவது சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், அடிக்கடி எதையாவது சாப்பிடவேண்டும் என்கிற எண்ணத்தையும் அவசியத்தையும் தகர்ப்பதுடன், சரியான நேரத்தில் பசி எடுக்கும்.

ஒபிஸிட்டி உள்ளவர்கள் மட்டுமல்ல... மற்றவர்களும்கூட காலை சிற்றுண்டியை எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது. அப்படிச் சாப்பிடாமல் இருந்துவிட்டு, 7, 8 மணி நேரம் கழித்து லஞ்ச் சாப்பிடும்போது அதிகப்படியாக சாப்பிடுவோம். இதனால் சரியாக ஜீரணமாகாமல் போகும். உடல் எடையும் கூடிவிடும். சரியான நேரத்தில் சாப்பிடுவது மிகவும் அவசியம்.

காலையில் காபி, டீ இவற்றுக்குப் பதிலாக சுக்கு சூப்பை சாப்பிடுவது ஒபிஸிட்டிக்கு நல்லது. மலச்சிக்கலும் ஏற்படாது.

சுக்கு சூப் தயாரிப்பது எப்படி?

தேவையானவை: சுக்கு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் - தலா 1, பரங்கிக்காய் - ஒரு துண்டு (3 இன்ச் அளவு), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சுக்கு, மிளகு ஆகியவற்றை நன்றாக இடித்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பரங்கிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும்.

எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். தண்ணீர் வற்றியதும், மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.

சுக்கு சூப் தயார்!

கடந்த இதழில் பிளாக் காபி, பிளாக் டீ சாப்பிடலாம் என்று டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருந்தார். ஆனால், அதன் காரணமாக மலச்சிக்கல் பிரச்னை வரலாம். இதனால், எப்போதும் 'டல்'லாக இருப்பதுபோல உணர்வு ஏற்படும். இந்தச் சிக்கலை போக்க பால் உணவான பனீர் சாண்ட்விச் ரெசிபியைச் சொல்கிறேன். மதியவேளையில் இரண்டு சாண்ட்விச் சாப்பிடுங்கள். உடம்பு சுறுசுறுப்பாக இருக்கும். அடிக்கடி சாப்பிடவேண்டும் என்கிற எண்ணமும் தோன்றாது. மதிய தூக்கத்தையும் துரத்திவிடும்.

பனீர் சாண்ட்விச் தயாரிப்பது எப்படி?

தேவையானவை: விரல்அளவு பனீர் துண்டுகள் - 5, வட்டமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் - - தலா 2 துண்டுகள், கோதுமை பிரெட் - 2 ஸ்லைஸ், வெண்ணெய் - கால் டீஸ்பூன்.

செய்முறை: ஃப்ரை பேனில் சிறிது வெண்ணெயைப் போட்டு உருக்கி, பனீர் சேர்த்து வறுத்து இறக்கவும். உடைந்தாலும் பரவா யில்லை. ஒரு பிரெட்டில் இருபுறமும் வெண்ணெயைத் தடவி, வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காயை வைத்து லேசாக வறுத்த பனீரை வைத்து மற்றொரு பிரெட் துண்டால் மூடி அப்படியே சாப்பிடவேண்டும்.

எச்சரிக்கை: இதற்கு தக்காளி சாஸ், கெச்சப் என்று எதுவும் தொட்டுச் சாப்பிடக்கூடாது.
பரிமாறுவோம்....
--------------------------------------------------------------
"பிளாக் டீ மற்றும் காபி சாப்பிட்டால் மலச்சிக்கல் வரும் என்பது உண்மைதான். அதேசமயம், கொழுப்பு சேராது என்பதையும் கவனிக்கவேண்டும். இதற்காக பனீர் சாண்ட்விச் சாப்பிடலாம் என்று ஜேக்கப் சொல்வதையும் கடைபிடிக்கலாம். ஒபிஸிட்டி இருப்பவர்கள் கொஞ்சமாக பால் பொருட்கள் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை. உடலை சுறுசுறுப்பாக்கும் என்பதும் உண்மைதான். பனீரில் அதிகமாக புரொட்டீனும், மிகச்சிறிய அளவே கொழுப்பும் இருக்கிறது. பனீர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றாலும், அளவுகளை குறைத்துக் கொள்ளவேண்டும்" என்று சொன்னார்.
-------------------------------------------------------------------
சிச்சன் கிளினிக் ! ( 2)

எந்த நோய்க்கு என்ன சாப்பாடு ?

சர்க்கரையோடு சண்டைபோடும் சின்ன வெங்காயம் !

''சர்க்கரை குறைபாடு உள்ளவர்களை மூன்று விதமான நிலைகளாகப் பிரித்து அறியலாம். அவர்கள், தங்களின் நிலைக்கேற்ப உணவு முறையை மாற்றிக் கொண்டால், உடம்பில் சர்க்கரையின் அளவை எளிதில் கட்டுப்படுத்தலாம்'' என்று உற்சாகமூட்டும் 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி, அந்த மூன்று வகை ட்ரீட்மென்ட் நிலையைப் பற்றிச் சொன்னார்...

''சர்க்கரை குறைபாட்டின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்கள், வாக்கிங், உணவுக்கட்டுப்பாடு மூலம் சர்க்கரையின் அளவைக் குறைக்க முடியும்.

இரண்டாவது கட்டத்தில் இருப்பவர்கள்... உணவுக்கட்டுப்பாடு, மாத்திரை மற்றும் உடற்பயிற்சியின் மூலம் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

மூன்றாவதாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருக்கும் 30 வயதையட்டியவர்களுக்கு, உணவுக்கட்டுப்பாடு, எக்சர்சைஸ் மற்றும் இன்சுலின் போட்டுக் கொள்வதால் மட்டுமே சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும். சில பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் மூன்றாவது, ஆறாவது வாரத்துக்குள் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். இந்த காலகட்டத்தில் சர்க்கரை குறைபாடு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. கர்ப்ப காலம் முடிந்ததும், திரும்பவும் பழைய நிலைக்கும் வரலாம். சிலருக்கு அது தொடர்ந்து நீடிக்கவும் செய்யலாம். எனவே, இந்த விஷயத்தில் கவனமாக இருந்து, உடம்பைக் கண்காணிக்க வேண்டும்.


உடலின் எடைக்கேற்ப உணவு கலோரியின் அளவு எவ்வளவு இருக்கலாம் என்று தெரிந்து வைத்துக்கொள்வது... சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு வசதியாக இருக்கும்.

எந்த வேலையும் செய்யாமல், படுத்தபடுக்கையாக இருக்கும் சர்க்கரை குறைபாடுடைய ஒரு நபரின் உடல் எடை 60 கிலோ இருந்தால், 60 ஜ் 25 கலோரி = 1,500 கிலோ கலோரி அளவுக்கு தினமும் உணவு எடுத்துக் கொள்ளவேண்டும். குறைந்த வேலையை செய்யும் நபராக இருந்தால், உடல் எடையுடன் 30 கலோரியை பெருக்கினால் வரும் கிலோ கலோரி அளவுக்கு உணவு எடுத்துக் கொள்ளலாம். அதிக வேலை செய்யும் நபராக இருந்தால், உடல் எடையுடன் 35 கலோரியை பெருக்கி, அதற்கேற்ப உணவு எடுத்துக் கொள்ளவேண்டும் (கலோரி உணவு என்பது எனர்ஜியை குறிப்பிடும் அளவாகும். அதாவது, 100 கிராம் அரிசியில் 348 கிலோ கலோரியும், 100 கிராம் பருப்பில் 335 கிலோ கலோரியும், 100 கிராம் காய்கறிகளில் 20 முதல் 40 கிலோ கலோரியும் இருக்கின்றன. இந்த அளவை ஆதாரமாக வைத்து, கணக்குப் போட்டுப் பார்த்து உங்களின் சாப்பாட்டு மெனுவை ரெடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்).

பொதுவாக சர்க்கரை குறைபாடுள்ளவர்கள் உணவை ஒரே நேரத்தில் உண்ணாமல், குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிது சிறிதாக உண்பது நல்லது. அரிசியின் அளவைக் குறைத்து, காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம்'' என்று பட்டியலிட்டுச் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி.

இதோ... சர்க்கரை குறைபாடுடையவர்கள், சட்டென்று செய்து சாப்பிட, இரண்டு ரெசிபிகளோடு தயாராகிவிட்டார் 'செஃப்' ஜேக்கப்.

பீன்ஸ் சூப்

தேவையானவை: பீன்ஸ் - 100 கிராம், வெங்காயம், தக்காளி - 1, மிளகுத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், பிரியாணி இலை - 1, பட்டை, கிராம்பு - தலா 1, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, 4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். மிளகுத்தூள், பட்டை, கிராம்பு, இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். தண்ணீர் 2 டம்ளராக குறுகியதும், கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சூப் ரெடி.

சின்ன வெங்காயப் பிரட்டல்

தேவையானவை: சின்ன வெங்காயம் - கால் கிலோ, மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, கறிவேப்பிலை - ஒரு கட்டு, வறுத்துப் பொடித்த வெள்ளை உளுந்து - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம், கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து உப்பு போட்டு சிறிது தண்ணீர் விடவும். வெங்காயம் நன்றாக வெந்ததும் இறக்கி, உளுந்துப் பொடியை சேர்க்கவும்.

ரெசிபி சொல்லி முடித்த ஜேக்கப், ''பீன்ஸ் சூப்பை பசியெடுக்கும்போதெல்லாம், செஞ்சு சாப்பிடுங்க. அடிக்கடி பசி எடுக்காது. இந்த சூப்பில் ஒரு கோதுமை பிரெட்டை தோய்த்தும் சாப்பிடலாம்.

உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தர்றதுல்ல வெங்காயத்துக்கு ஈடு இணையே இல்லை. வெங்காயப் பிரட்டலைச் சாப்பிட்டா... அடிக்கடி தாகம் எடுக்காது. இதை பிரெட் மேல் தடவியும் சாப்பிடலாம்'' என்று ஆலோசனைகளையும் சொன்னார்.

இந்த ரெசிபிகளைக் கேட்ட 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி, ''சர்க்கரையின் அளவைக் குறைப்பதில் மசாலா பொருளான பட்டைக்கும் தனி பங்குண்டு. பீன்ஸ் சாப்பிடுவதால் நார்ச்சத்து கிடைக்கிறது. வெங்காயப் பிரட்டலில் வெந்தயம் சேர்ப்பதால், கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, சர்க்கரையின் அளவும் குறையும்'' என்று 'சபாஷ்' சர்டிஃபிகேட் தந்தார்.
---------------------------------------------------------------------
கிச்சன் கிளினிக்-3- எந்த நோய்க்கு என்ன சாப்பாடு ?



'எரிமலை' உடம்பை 'பனிமலை'யாக்கும் நுங்கு பாயசம் !
கொளுத்தும் கோடை வெயிலில் கல்லே உருகி ஓட ஆரம்பித்துவிடும் போலிருக்கிறது. அப்படியிருக்க... மனிதர்கள் என்ன செய்ய முடியும்? கொஞ்சம் உஷாராக இல்லாவிட்டால்... ஆளையே ஆட்டிப்பார்த்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த 'உஷார்' குறித்து பேசும் 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி... ''வெப்பக் கதிர்களின் தாக்குதல் காரணமாக அயர்ச்சி, சோர்வு, அதீத தாகம் இதெல்லாம் ஏற்படுவது இயற்கையே. அதேபோல தோலில் அலர்ஜி அதிகமாக தொற்றிக் கொள்வதும் இந்த சீஸனில்தான். உடலில் அதிகப்படியான வியர்வை வெளியேறுவதால், அதிக நீர்ச்சத்து வெளியேறி... அரிப்பு, வேர்க்குரு, வேனல்கட்டிகள், ஒவ்வாமை என்று இம்சிக்கத் தொடங்கும்.


உடலுக்குள்ளேயும் நோயின் பாதிப்பு நிச்சயம் இருக்கும். அதிலும், உஷ்ண உடம்பாக இருந்துவிட்டால் அவ்வளவுதான்... கிட்னியில் 'கல் அடைப்பு' வரை வந்து வாட்டும்! நார்மலாக நாள் ஒன்றுக்கு ஒண்ணரை லிட்டர் தண்ணீர்தான் நாம் குடிப்போம். ஆனால், இந்த சீஸனில் நான்கு முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்காமல் போனால்... வியர்வை வெளியேற வழியே இல்லாமல் போகும். இதனால், நாம் சாப்பிடும் பொருளில் உள்ள அதிகப்படியான தாது உப்புக்கள் சேர்ந்து 'கல்'லாக உருவாகி, கிட்னியில் டெபாஸிட் ஆகிவிடும். இதனால், சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாக நேரிடும்.

அதிகம் வெளியில் சுற்றுபவர்கள், நேரடியாக சூரியனுடைய கதிர் வீசும் இடங்களில் இருப்பவர்களுக்கு கிட்னியில் கல் உருவாக வாய்ப்பு அதிகம். உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது இதிலிருந்தெல்லாம் தப்பிப்பது" என்றவர்,

''தினமும் இரண்டு வேளை குளிப்பதால் உடல் உஷ்ணம் குறையும். தண்ணீர், குறைந்த அளவு பால், நிறைய மோர், ஓரளவு மீன் உணவு, வாழைத்தண்டு, வாழைப்பூ, எலுமிச்சை ஜூஸ் இவற்றை அன்றாடம் சேர்த்துக் கொள்வதன் மூலம் கிட்னியில் வரும் கல்லைக் கரைந்துவிடமுடியும். கஞ்சி, ஜூஸ் போன்றவை உடலுக்கு நல்ல எனர்ஜியை கொடுக்கும். பெரும்பாலும் நீராகார உணவுகள்தான் பெஸ்ட்" என்றவர்,

''குளிக்கும்போது தண்ணீரில் வேப்பிலை, துளசியைப் போட்டுக் குளியுங்கள். சரும நோய்கள் அண்டாமல் இருக்கும். உஷ்ணம் சார்ந்த நோய்களும் கிட்டே நெருங்காது'' என்று டிப்ஸ்களையும் தந்தார்.

''வெயிலை மட்டுமில்ல, அதனால் வரும் வியாதிகளையும் உணவு முறையில விரட்ட கைவசம் ஏகப்பட்ட சரக்கு இருக்கிறது" என்ற படியே செஃப் ஜேக்கப் அடுக்கிய ரெசிபிகளில் சில...

வெள்ளரிக்காய் ரிலீஸ்

தேவையானவை: வெள்ளரிக்காய், முள்ளங்கி - தலா ஒரு பெரிய துண்டு, புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கப், மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை, சாலட் ஆயில் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரிக்காய், முள்ளங்கி, புதினா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன் சாலட் ஆயில் சேர்க்கவும். பிறகு... உப்பு, மிளகுத்தூள் தூவினால்... வெள்ளரிக்காய் ரிலீஸ் ரெடி. சப்பாத்தி, பிரெட் போன்றவற்றை இதில் தோய்த்துச் சாப்பிடலாம். பிரெட் சாண்ட்விச் போல, பிரெட்டுக்கு நடுவில் இதை வைத்தும் சாப்பிடலாம்.

நுங்கு பாயசம்

தேவையானவை: நுங்கு - 4 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), தேங்காய்ப் பால், காய்ச்சிய பால் - தலா ஒரு கப், சர்க்கரை - தேவையான அளவு, முந்திரி விழுது - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: காய்ச்சிய பாலில் சர்க்கரை, தேங்காய்ப் பால், முந்திரி விழுது சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். தேவைப்படும்போது... ஏலக்காய்த்தூள், நுங்கு சேர்த்துப் பரிமாறுங்கள். அருமையாக இருக்கும்.

'செஃப்' தந்த ரெசிபிகளை கேட்ட 'டயட்டீஷியன்', ''இரண்டு ரெசிபிகளுமே நாவுக்கு ருசியை யும், உடலுக்குக் குளிர்ச்சியை யும் நிச்சயம் தரும்.

வெள்ளரிக்காய் ரிலீஸில் சாலட் ஆயில் சேர்த்திருப்பதால் தேவையான கலோரி கிடைத்துவிடும். வெள்ளரி, முள்ளங்கி சேர்ப்பதால் நீர்ச்சத்துடன், நார்ச்சத்தும் உடம்பில் சேரும். ஓரளவு வைட்டமின்களும் கிடைக்கும். புதினா, கொத்தமல்லியினால் பீட்டாகரோட்டின் நமக்கு கிடைத்து விடுகிறது. நல்ல வாசனையுடன் டேஸ்ட்டும் அபாரமாக இருக்கும். சாப்பிட்டதும் நிறைய தண்ணீர் குடித்தால்... அத்தனை சத்துக்களையும் உடல் ஈஸியாக கிரகித்துக் கொள்ளும்.

நுங்கு பாயசத்தில் அதிக அளவு கலோரியும், நுங்கில் நிறைய நீர்ச்சத்தும், நார்ச்சத்தும், மினரல் ஸும் கிடைக்கும். தாகமே எடுக்காது. பசி அடங்கும். இதைச் சாப்பிட்டதும் மோர் குடிக்கலாம்" என்றவர்,

''மொத்தத்தில்... எரிமலையாக தகித்த உடம்பு, பனிப் பிரதேசமாக மாறிவிடும்!'' என்றார் முத்தாய்ப்பாக.



எந்த நோய்க்கு என்ன சாப்பாடு?
டி.பி -யுடன் டிஷ்யூம் போடும் நெல்லிக்காய் புளிக்குழம்பு !

எலும்புகளை குறி வைக்கும் 'ஆஸ்டியோபெரோசிஸ்' எனப்படும் நோயின்தாக்கம்... அதை உணவு முறைகளால் எப்படி எதிர்கொள்வது என்று கடந்த இதழ்களில் அலசினோம். இந்த இதழில் டி.பி. எனப்படும் எலும்புருக்கி நோயிலிருந்து விடுதலையாக என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்பதைப் பற்றி செஃப் ஜேக்கப் சொல்கிறார்.



அதைக் கேட்பதற்கு முன்பாக... டி.பி. நோய் பற்றி, சென்னை, விஜயா மருத்துவமனையின் நுரையீரல் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் சங்கீதா பேசுவதைக் கேட்டுவிடுவோமா?

"டி.பி. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு விரைவில் பரவக்கூடிய ஒரு தொற்று நோய். உடம்பில் எதிர்ப்புச் சக்தி குறையும்போது, இது எளிதில் தொற்றிக் கொள்ளும். மைக்கோ பேக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ் (Mycobacterium Tuberculosis - MTB) என்ற கிருமி தொற்றினால் இது வருகிறது. ஒருவரது உடம்பில் தொண்டை, நுரையீரல் பகுதியை இந்த நோய் தாக்கினால் மற்றவர்களுக்கு எளிதில் பரவிவிடும். மூளை, கல்லீரல், குடல், கிட்னி, மூட்டுப் பகுதி, கண் போன்ற உடம்பின் மற்ற எந்த உறுப்புகளை தாக்கினாலும் இது அடுத்தவர்களுக்கு பரவ வாய்ப்பே இல்லை.

எதனால் வருகிறது?

பொதுவாக எல்லோருடைய உடம்புக்குள்ளும் MTB நுண்கிருமி ஒன்று, இரண்டு இருக்கும். சளி, எச்சில் மூலமாகவும், சுவாசிக்கிற பாக்டீரியாவின் அளவு அதிகமாகும்போதும், உடலுக்குள் இருக்கும் இந்த கிருமியின் அளவும் அதிகரிக்கும். சரிவர கவனிக்காவிட்டால், டி.பி. நோய் என்ற நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.

அறிகுறிகள்..?

காலை, மாலை நேரங்களில் தொடர்ந்து லேசான காய்ச்சல் இருந்து கொண்டேயிருக்கும். உடல் எடை குறைந்துவிடும். பசியே இருக்காது. மூன்று வாரத்துக்கு மேலாக இருமல், லேசான காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

சிகிச்சை..?

டைபாய்டு, மலேரியா போன்ற நோய்களுக்கு ஒருவகையான மருந்து கொடுத்து குணப்படுத்திவிடலாம். ஆனால், டி.பி-யைப் பொறுத்தவரை, நான்கு மருந்துகள் ஒன்றாகக் கொடுத்தால்தான் கிருமிகள் அழியும். நோயாளிகள் முழுமையாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல், பாதியில் நிறுத்தினால், அந்தக் கிருமிகள் முற்றிலும் அழியாமல் உடம்பில் இருந்துகொண்டே இருக்கும்.

மருத்துவரின் ஆலோசனைப்படி, மாத்திரை மருந்துகளை முழுமையாக எடுத்துக் கொள்ளுதல், அதிக அளவு புரதச் சத்தான ஆகாரங்களை உட்கொள்ளுதல், காற்று வசதியுள்ள இடத்தில் வசித்தல் போன்றவற்றினாலும், தொடர் சிகிச்சையினாலும் குறைந்தபட்சம் மூன்றே மாதத்தில் டி.பி-யை முற்றிலும் குணப்படுத்திவிட முடியும்" என்று சொன்னார் டாக்டர் சங்கீதா.

"புரதம் நிறைந்த பாதாம், பருப்பு வகைகளில் உணவுகளைத் தயாரித்திருக்கிறேன். மருத்துவ சிகிச்சையுடன், மகத்தான இந்த உணவுகளும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்' என்று நம்பிக்கைத் தெறிக்கப் பேசும் செஃப் ஜேக்கப், ரெசிபிகளை சொல்ல ஆரம்பித்தார்.

நெல்லிக்காய் புளிக்குழம்பு

தேவையானவை: நெல்லிக்காய் - 100 கிராம், புளிக் கரைசல் - 2 கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு, சின்ன வெங்காயம் - தலா 10, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த பட்டாணி - 20 கிராம், நெய் (அ) எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த பட்டாணியை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் வேக வைத்துக் கொள்ளவும். நெல்லிக்காயை கொட்டை நீக்கி, நான்கு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பூண்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, புளிக் கரைசலை சேர்த்துக் கொதிக்கவிடவும். வெந்த பட்டாணி, நறுக்கிய நெல்லிக்காய் சேர்த்துக் கொதித்து நன்றாக வெந்ததும், இறக்கவும்.

இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
சுரைக்காய் தொக்கு


தேவையானவை: தோலுடன் கட்டமாக நறுக்கிய சுரைக்காய் - 200 கிராம், வெங்காயம், தக்காளி - தலா 2 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், அரைத்த முந்திரி விழுது - 3 டேபிள்ஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், சோம்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பயத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பயத்தம்பருப்பை அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு தக்காளி, இஞ்சி -பூண்டு விழுது, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஊறிய பருப்பு சேர்த்து கிளறி, முந்திரி விழுதையும் சேர்க்கவும். நறுக்கிய சுரைக்காயைப் போட்டு அடிக்கடி தண்ணீர் தெளித்துவிட்டு, எண்ணெய் மேலாக மிதந்து வரும் வரை வேகவிட்டு, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

இதை சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.

பாதாம் குழம்பு


தேவையானவை: முழு பாதாம் - 50 கிராம், அரைத்த பாதாம் விழுது - 5 டேபிள்ஸ்பூன், அரைத்த கசகசா - 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 1, பச்சை மிளகாய் - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்ப் பால் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நெய் விட்டு காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலையை போட்டு வதக்கி, பாதாமை சேர்த்து வறுக்கவும். இதனுடன் அரைத்த பாதாம் விழுது, கசகசா விழுது சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பிறகு தேங்காய்ப் பால் சேர்த்து கொதித்ததும் பச்சை மிளகாயை கீறிப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

நாண், ரொட்டி, சப்பாத்தி, இடியாப்பத்துக்கு ஏற்ற சைட் டிஷ் இது!

'டயட்டீஷியன்' கருத்து...

செஃப் ஜேக்கப்பின் ரெசிபிகளைப் படித்த டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி, ''டி.பி-யைப் பொறுத்தவரை மருந்து, மாத்திரைகள் அவசியம். அத்தோடு உணவுப் பழக்கமும் மிக முக்கியம். அதேசமயம், நோய் வராமல் தடுக்க உணவுப் பழக்கத்தை கடைபிடிக்கலாம்.

ஜேக்கப் சொல்லும் நெல்லிக்காய் குழம்பு நல்ல பசியைத் தூண்டும். பச்சைப்பட்டாணியில் புரதம் கிடைத்துவிடும்.

சுரைக்காய் தொக்கிலும் முந்திரி சேர்த்திருப்பதால் காப்பர், துத்தநாகம், மெக்னீஷியம், மேங்கனீஷ் போன்ற தாது உப்புக்கள், புரதம், கார்போஹைட்ரேட் சத்துக்கள் கிடைத்து உடம்பை வலுவாக்கும்.

பாதாம்குழம்பில் கொழுப்பு, புரதம், தாது உப்புக்களும் அதிகமாக இருப்பதால் இழந்த எனர்ஜியை திரும்ப மீட்டுத்தந்து, தெம்பைக் கூட்டிவிடும்.

மொத்தத்தில் மூன்று ரெசிபிகளையும் சாதம், டிபன் அயிட்டங்களில் சேர்த்து சாப்பிட்டால் சத்துக்கள் உடம்பில் சேர்ந்து நோயை விரட்டிவிடும்" என்று சொன்னவர்,

''சோயா, பருப்பு வகைகள், சுண்டல், தட்டைப்பயறு போன்றவற்றில் அதிகமாக புரதச்சத்து கிடைக்கிறது.

டி.பி. நோய் இருப்பவர்கள் வெஜிடேரியனாக இருந்தால், நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் பசும்பால் சாப்பிட்டால் நல்ல தெம்பு கிடைக்கும். மேலும் நெய் சேர்த்த பருப்பு சாதம் சாப்பிடலாம்.

நான்-வெஜ் சாப்பிடுபவர்கள், தினமும் ஒரு முட்டை, வாரத்துக்கு இரண்டு நாட்கள் மீன், இரண்டு நாட்கள் சிக்கன் என வாரம் ஐந்து நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்'' என்று கூடுதல் தகவல்களைத் தந்தார்
-------------------------------------------------------------------------------------------
எந்த நோய்க்கு என்ன சாப்பாடு?



கிக்கன் கிளினிக் !
புதிய பகுதி
எந்த நோய்க்கு என்ன சாப்பாடு ?



கொழுப்பைக் குறைக்கும் கொள்ளு சூப் !
கிச்சன் கிளினிக் !

கடந்த இரண்டு இதழ்களாக 'ஒபிஸிட்டி' எனப்படும் உடல்பருமனைக் குறைப்பதற்கான உணவுகளைப் பார்த்து வருகிறோம். இந்த இதழிலும் அது தொடர்கிறது.

''ஒபிஸிட்டியை குறைப்பதற்கான உணவுப் பழக்கங்களைக் கடைபிடிக்காமல் போனால், உடலில் வியாதிகள் பெருகி நம் ஆயுளையும் குறைத்துவிடக்கூடிய அபாயம் இருக்கிறது'' என்று எச்சரிக்கும் சீனியர் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி, கவலைப் பொங்கப் பேசும் விஷயங்களுக்கு கொஞ்சம் காதுகொடுப்போமா..?!

''அந்தக் காலத்தில் எங்கு சென்றாலும், நடை (அ) சைக்கிளில்தான் பயணம். ஆனால், இன்றைய தலைமுறை... நடைக்கே தடை போட்டுவிட்டது. எங்காவது ரோட்டில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்க முடிகிறதா? எப்போதும் படிப்பு, ஹோம் வொர்க், டி.வி. என இருக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமல் நேரத்தைச் செலவழிக்கின்றனர். இதனால், உடற்பயிற்சி என்பதே இல்லாமல் போய், ஒபிஸிட்டியில் கொண்டு விடுகிறது.


பள்ளிக்கூட வாயிலில் நின்று... பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி போல தெரிபவரை நெருங்கிச் சென்று விசாரித்துப் பாருங்கள்.. 'நான் ஃபிப்த் படிக்கிறேன் ஆண்ட்டி' என்று கொஞ்சலாக சொல்லி அதிர்ச்சியூட்டக்கூடும். அந்த அளவுக்கு உணவுப் பழக்கம் தாறுமாறாகப் போய்க்கொண்டிருக்கிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் அப்பா-அம்மாக்களின் திணிப்பு தொடர்கிறது. இதுவே ஒரு தூண்டலாக இருந்து, பள்ளிப் பருவத்தைத் தாண்டிய பிறகும் குழந்தைகளின் தாறுமாறான சாப்பாட்டைத் தொடர வைக்கிறது.

சரி, 'படிப்பு முடிந்துவிட்டது. நல்ல வேலையிலும் அமர்ந்துவிட்டோம். கைநிறைய சம்பாதிக்கிறோம். இனியென்ன... ஜாலிதான்!' என்றபடி விரும்பியதையெல்லாம் வாங்கிச் சாப்பிடுகின்றனர். மெஷினாகிப் போன வாழ்க்கையில், 'வயிற்றுக்கு எது நல்லது?' என்று ஆராய்வதற்கு நேரமும் இல்லை... பொறுமையும் இல்லை. வாய்க்கு ருசியாக என்ன கிடைத்தாலும்... அது, எந்த எண்ணெயில் வறுத்தெடுத்ததாக இருந்தாலும் பதார்த்தங்கள், புரோட்டா என்று கடின உணவுகளை மூக்குமுட்டச் சாப்பிடுகிறார்கள். அப்படிச் சாப்பிடுவதை, நேரத்துக்காவது சாப்பிடுகிறார்களா... என்றால், அதுவும் இல்லை. இரவு பத்து மணி... பன்னிரண்டு மணி... விடிகாலை மூன்று மணி என்று நேரம் கெட்டநேரத்தில் சாப்பிடுவதே பலருக்கும் ஃபேஷனாகிவிட்டது. கடைசியில் எல்லாமும் சேர்ந்து ஒபிஸிட்டி என்று உடலை ஊதிப் பெருக்கிவிடுகிறது.

சிலருக்கு சாப்பிடுவதே ஃபேஷன். சிலருக்கோ... வேலை காரணமாக வேறு வழி யில்லாமல் இப்படியெல்லாம் சாப்பிட வேண்டிய கட்டாயம்.

ஆனால், இதையெல்லாம் பார்த்துவிட்டு எங்கெங்கோ இருக்கும் பங்காளிகள்... உடன் பங்காளிகள் எல்லாருக்கும் கொண்டாட்டமோ... கொண்டாட்டம். சர்க்கரை நோய், பித்தப்பை கல், பிராஃக்சர், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், மனதளவில் தாழ்வு மனப்பான்மை, கூச்ச மனப்பான்மை என்று அந்தப் பங்காளி... இந்தப் பங்காளி என்று எல்லாமும் கூடி வந்து கும்மியடிக்க ஆரம்பித்துவிடுகின்றன. விளைவு, ஆயுட்காலமும் அற்ப ஆயுளாய் குறைய ஆரம்பித்துவிடுகிறது'' என்று கவலையோடு சொல்லும் டயட்டீசியன்,

''பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளைப் பொத்திப் பொத்திப் பாதுகாப்பதில் தவறில்லை. ஆனால், நாம் செய்வதெல்லாம் சரிதானா என்று அலசி ஆராய்ந்துவிட்டு செய்யுங்கள். குழந்தைகளை ஓடியாடி விளையாட விடுங்கள்... அதன்பிறகு படிக்க வையுங்கள். ஆரோக்கியமான உணவும், அக்கறையான கவனிப்புமே எப்படிப்பட்ட வியாதியையும் விரட்டியடித்துவிடும். ஆரம்பத்தில் இதையெல்லாம் மறந்து... மறுத்து... உங்கள் போக்கில் பெட்டிப்பாம்பாக குழந்தைகளை வளர்த்தால்... பிறகு, வைத்தியத்துக்கு பெட்டி பெட்டியாக செலவு செய்ய நேரிடும். அப்படிச் செய்தாலும் முழுமையான பலன் கிடைக்கும் என்று சொல்ல முடியாது'' என்று எச்சரிக்கையும் விடுக்கிறார்.

சரி, வந்தது வந்துவிட்டது 'ஒபிஸிட்டி'. கரைப்பதற்கு மேற்கொண்டு வேறு என்ன வழிகளெல்லாம் இருக்கிறது.''கொழுத்தவனுக்கு கொள்ளு என்றொரு சொலவடையே இருக்கிறது. குதிரைக்கு பிரியமான கொள்ளு, மனிதர்களின் உடலில் உள்ள கொழுப்பை நீக்கி, உரம் போல் வைத்திருக்கும் அற்புதமான மந்திரத்தை தன்னகத்தே கொண்ட ஒரு தானியம்'' என்று வியந்து போற்றும் ஜேக்கப், கொள்ளுப் பயறு ரெசிபிகளை இங்கே படையலிடுகிறார்.

கொள்ளு சூப்

தேவையானவை: கொள்ளுப் பயறு - 100 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள், சுக்குப் பொடி - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா 1, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: கொள்ளுப் பயறை முந்தைய நாள் இரவே நன்றாகக் கழுவி, ஊற வைக்கவும். மறுநாள் அந்தத் தண்ணீரை வடிகட்டாமல் நன்றாகக் குழையும் அளவுக்கு வேக வைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இதில்... வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். மிளகுத்தூள், சீரகத்தூள், சுக்குப் பொடி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கொதித்ததும் இறக்கி, நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.

இந்த சூப்பை மேலாக வடிகட்டி, காலையில் 2 பன்னுடன் சேர்த்துச் சாப்பிடலாம். அடிக்கடி சாப்பிடவேண்டும் என்ற உணர்வு தோன்றாமல், சரியான நேரத்தில் பசியெடுக்கும்.

இந்த சூப்பின் அடியில் தேங்கியிருக்கும் கொள்ளு வண்டலை வைத்து, கொள்ளு கூட்டு தயாரிக்கலாம்.

கொள்ளு கூட்டு

தேவையானவை: கொள்ளு வண்டல் - 2 கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய பூண்டு, நறுக்கிய இஞ்சி - தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய காய்கறி (பூசணி, வெள்ளரி, சௌசௌ, புடலங்காய் - இதில் ஏதாவது ஒன்று) - ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, அதில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். நறுக்கிய காயைப் போட்டு தண்ணீரை விட்டு வேகவிடவும். நன்றாக வெந்து கொதித்ததும், வெந்த பருப்பைச் சேர்த்து மேலும் கொதிக்கவிட்டு இறக்கவும்.

இந்த கூட்டை மதியவேளையில் சாதத்துடன் பிசைந்து சாப்பிட வேண்டும்.


கொள்ளு உணவை பற்றி டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தியின் கருத்து:


"கொள்ளு ஒபிஸிட்டியைக் குறைப்பதற்கு ஏற்ற உணவு. 100 கிராம் கொள்ளுப்பயறில் புரதம்- 22 கிராம், மாவுச்சத்து - 57.2% எனர்ஜி - 321 கி.கலோரி, கால்சியம் - 287 மில்லி கிராம், பாஸ்பரஸ் - 311 மில்லி கிராம், இரும்பு - 6.77 மில்லி கிராம், நார்ச்சத்து - 5.3% ஆகிய அளவில் இருக்கின்றன. இதில் தாதுப்பொருட்கள், நார்ச்சத்துக்கள் என அதிக அளவு சத்துக்கள் நிறைந்திருப்பதால் ஒபிஸிட்டியை குறைக்க வழி செய்யும். அதேசமயம், கொள்ளுப் பயறில் ஆசாலிக் ஆசிட் (Osalic Acid) அதிகமாக இருக்கிறது. இதனால், கொள்ளுப் பயறை அதிக அளவு சேர்த்துக் கொள்ளக்கூடாது. சிறுநீரகத்தில் கல் வரவும் வாய்ப்பு உண்டு. ஆனால், செஃப் ஜேக்கப் சொன்ன இந்த கொள்ளுக் கூட்டில் நீர்ச்சத்து காய்கறிகளைச் சேர்த்திருப்பதாலும், அதிக அளவு தண்ணீரைப் பருகுவதாலும், இந்தப் பிரச்னை வராமல் தடுக்க முடியும்."
-----------------------------------------------------------------------------------------

முதுமையைக்கூட மூலிகையால் தள்ளி வைத்து, நோயின்றி வாழ்வாங்கு வாழ்ந்தது நம் தமிழ்க்குடி! இன்றோ, பிறந்த குழந்தை முதல்... பல் விழுந்த தாத்தா வரை பெரும்பாலானவர்கள் ஏதாவதொரு நோயுடன்தான் ஜீவிக்கிறார்கள்!



சுண்டு விரல் வலிக்குக்கூட ஸ்கேன் எடுப்பது ஃபேஷனாகிவிட்ட இந்த யுகத்தில், மருந்தில்லாத ஆரோக்கிய வாழ்க்கையை, உணவு முறை மாற்றத்தால் சாத்தியப்படுத்துவதற்காகவே இந்தத் தொடர்!

'மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு'


என்று, உடம்போடு மாறுபடுதல் இல்லாத உணவினை அளவோடு உண்பவரது உயிர்க்கு நோயால் துன்பம் உண்டாகாது என்ற வாக்குக் கொடுக்கிறார் வள்ளுவர்.

உணவு... வாய்க்கு ருசியாக இருந்தால் மட்டும் போதுமா? உடல் நலத்துக்கு இம்சை செய்யாமல் இருக்க வேண்டும்தானே! அத்தகைய உணவு விதியை நமக்கு கற்றுத் தந்து, இனி நோய்களுக்கான மருந்து, மாத்திரையை விடுத்து, விருந்து மாத்திரை பந்திக்கு நம்மைச் சாப்பிட அழைக்கிறார் 'நளபாக சக்கரவத்தி' செஃப் ஜேக்கப் சகாய குமார்!

''உணவில் மைதா, அரிசி, சர்க்கரைங்கிற மூன்று வெள்ளைக்காரனை துரத்தினாலே ஆரோக்கியமா வாழலாம்'' என்று முத்தாய்ப்பாகச் சொல்லும் ஜேக்கப்... கோவை, சங்கரா கல்லூரியில் கேட்டரிங் டிபார்ட்மென்ட் டைரக்டராக இருக்கிறார். இவர் ஒரு சமையல் ஆராய்ச்சியாளர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஃபேர்வெல் டின்னருக்கு டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஒரு வாரம் தங்கியிருந்து இவர் படைத்த கொங்குநாட்டு விருந்து, இவருடைய திறமைக்கான அங்கீகாரம்! 2005-09-க்கான 'பெஸ்ட் யங் செஃப் இன்ஸ்ட்ரக்டர்' விருதையும் வாங்கியிருக்கும் இவர், தன் துறையில் நித்தமும் தேடலோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்!

''என்ன.. கை கழுவியாச்சா..?'' என ஆவலோடு கேட்கும் ஜேக்கப், இனி உங்களோடு...

''முதல்ல நாம பார்க்கப் போறது ஒபிஸிட்டி (obesity) எனப்படும் அதீத உடல் பருமனுக்கான உணவு வகைகள் பற்றி! பொதுவா, அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்த உணவை சாப்பிடும்போது, தேவைக்கு அதிகமான கலோரிகள் பயன்படுத்தப்படாம உடம்புல கொழுப்பா சேர்ந்து, ஒபிஸிட்டியை ஏற்படுத்திடும். இந்த உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரழிவு நோய்க்கும் வழி வகுத்துடும். அந்த நிலையில மருந்து மூலமா எடை குறைக்கறதைவிட, குறைந்த கலோரி உணவுகளும் உடற்பயிற்சியும்தான் இதற்கான சிறப்பான தீர்வா இருக்கும்.


பெரும்பாலானவங்களுக்கு காய்கறிகள்ல முட்டைகோஸ், முள்ளங்கி வாசனை பிடிக்கவே பிடிக்காது. ஆனா, இதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. அரை கிலோ கோஸ்ல 15 கலோரிகள்தான் உடல்ல சேரும். கூடவே, இது உடலுக்கு உஷ்ணத்தை கொடுத்து நீர், நார்ச்சத்து உணவுகளை அதிகமா சாப்பிட வைக்கும். கொழுப்பையும் கரைச்சுடும். அதேபோல, உடம்புல இருக்கற நச்சுத்தன்மையை முள்ளங்கி வெளியேற்றிடும். அதனால இந்தக் காய்கறிகளை உணவுல அதிகம் சேர்த்துக்கறது நல்லது'' என்கிற ஜேக்கப் உடல் பருமனைக் குறைப்பதற்கான உணவு முறைகளைத் தருகிறார்.

காலையில்...முட்டைகோஸ் சூப்

தேவையானவை: முட்டைகோஸ் - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 50 கிராம், தக்காளி - 1, இஞ்சி - 3 இன்ச், மிளகு, சீரகம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: முட்டைகோஸ், வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டுத் தண்ணீர் ஊற்றி அரை டீஸ்பூன் மிளகு, சீரகம் போட்டு, மஞ்சள்தூள், கொத்தமல்லி சேர்த்து மேலும் தண்ணீரை ஊற்றி வேகவிடவும்.



ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, அதில் மீதமுள்ள அரை டீஸ்பூன் மிளகு, சீரகம் போட்டுத் தாளித்து, சூப்பை கொட்டி 2 கப் தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும். தண்ணீர் அதிகம் சேர்ப்பது மிகவும் நல்லது.

இதைத் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மதியம் வரை பசியே எடுக்காது. நன்றாக சிறுநீர் வெளியேறும். பொதுவாக, உடம்பில் உள்ள நீர்ச்சத்து வெளியேறினால், உடல் எடை குறையும்.

மதியத்துக்கு...முட்டைகோஸ் சாதம்

தேவையானவை: கோஸ் பொரியல் - 100 கிராம், வடித்த சாதம் - 100 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: சாதத்துடன் கோஸ் பொரியலை கலந்து மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி இறக்கவும். இதுதான் மதிய சாப்பாடு. இதற்கு தொட்டுக் கொள்ள அப்பளம், சிப்ஸ் என்று எதுவுமே சேர்த்துக் கொள்ளக்கூடாது.

இரவு... முள்ளங்கி சப்பாத்தி

தேவையானவை: முள்ளங்கி - 1, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், சப்பாத்தி - 1, உப்பு - சிறிதளவு.

செய்முறை: முள்ளங்கியைத் துருவி அதில் மஞ்சள்தூள், உப்பு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வும். (இதிலுள்ள வாடை போய்விடும்) பிறகு தண்ணீரை நன்றாக வடித்துவிடவும். இதில் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலந்து சப்பாத்தியின் மேல் பரவலாக போட்டு ரோல் செய்து சாப்பிடவும்.

இதுபோல் இரவில் இரண்டு சப்பாத்திகள் சாப்பிடலாம். அதற்குமேல் சாப்பிட முடியாது. மலச்சிக்கல் பிரச்னையும் இருக்காது. உடம்பும் லேசாக இருப்பதுபோல் உணரமுடியும்.''

என்ன.. மருந்துக்கு கொடுக்கும் காசை விருந்துக்குக் கொடுக்கத் தயாராகிவிட்டீர்களா..?

"தைராய்டு பிரச்னை இருந்தால் கோஸ்-முள்ளங்கி வேண்டாம் !"

செஃப் ஜேக்கப் சொல்லும் மருந்து ரெசிபி பற்றி சென்னை, விஜயா மருத்துவமனையின் பதிவுபெற்ற சீனியர் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தியின் சின்ன அலசல்!

"ஒருவரின் வயதுக்குரிய நார்மல் எடையைக் காட்டிலும் 10 முதல் 20 சதவிகிதம் எடை அதிகமாக இருந்தால், அது ஓவர் வெயிட். 20 முதல் 25 சதவிகிதம் என்றால் அது, ஒபிஸிட்டி. இது, குண்டாகவும் இருக்கலாம். கொழுத்தும் போயிருக்கலாம். இது (BMI) பாடி மாஸ் இன்டெக்ஸ் (BMI = weight in Kg/ Height metre square) என்ற முறையில் கணக்கிடப்படும்.

உடலில் அதிகமாக கொழுப்புச் சேர்வதால் உடல் பருமனாகி எடை கூடிவிடும். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருத்தல், கொழுப்பு மற்றும் மொத்த கலோரிகள் அடங்கிய மிகுதியான உணவை உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால், கலோரிகள் பயன்படுத்தப்படாமல் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகின்றன. இதனால், உடலானது நோய்களின் வாசஸ்தலமாகிவிடுகிறது.

மருந்துகளைப் பயன்படுத்தி உடல் பருமனை குறைக்க முடியாது. உணவும் உடற்பயிற்சியும்தான் இதற்கு ஒரே தீர்வு. பொதுவாகவே உணவே மருந்து... மருந்தே உணவு என்பதுதான் உண்மை.

உடல் பருமன் நோய் உள்ளவர்களுக்கு கோஸ், முள்ளங்கியைச் சாப்பிடச் சொல்கிறார் செஃப். ஆனால், தைராய்டு பிரச்னை இருந்தால் கண்டிப்பாக இந்தக் காய்கறிகளைச் சேர்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக சௌசௌ, புடலங்காய், பீர்க்கங்காய் சாப்பிடலாம்."
-----------------------------------------------------------------------------------------------
எந்த நோய்க்கு என்ன சாப்பாடு?
டயரியாவுக்கு தடா போடும் தயிர் பிரெட் !

மலச்சிக்கலையும் அதைத் தீர்க்கும் மகத்தான உணவு முறைகளையும் சென்ற இதழில் பார்த்தோம். இந்தச் சிக்கலுக்கு நேர் எதிரானது 'டயரியா' Diarrhea எனப்படும் வயிற்றுப்போக்கு.

அதைப் பற்றி பேசுகிறார் 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி... ''குடல்களின் இயக்கங்களும், அதிகப்படியான அசைவுகளும் வயிற்றுப் போக்கு ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றன. வேறு நோய்களுக்கான மருந்து நம் உடம்புக்கு ஒப்புக் கொள்ளாமல் போதல், குடல்களில் பாக்டீரியா, வைரஸ் தொற்று, பால் ஒவ்வாமை, நாள் பட்ட உணவுகள், சாப்பாட்டின் விஷத்தன்மை, மாசுபட்ட குடிநீர் என்று பல்வேறு காரணங்களாலும் வயிற்றுப் போக்கு வாட்டி எடுத்துவிடும். இதுதவிர, மனரீதியான பாதிப்புகளாலும், பரீட்சை பயத்தினாலும்கூட வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

அடிக்கடி அதீத தாகம், வாய்-நாக்கு வறண்டு போதல், தோலிலும் வறட்சி, அடிவயிற்றில் வலி... இவையெல்லாம், வயிற்றுப்போக்குக்கு அறிகுறி. தொடர்ந்து வயிற் றைக் கலக்கிக் கொண்டேயிருக்கும்... பாத்ரூம் போனதும் தண்ணீர் குழாயைத் திறந்துவிட்டது போல் கழிவுகள் பீய்ச்சி அடிக்கும். நாள் ஒன்றுக்கு நான்கு ஐந்து முறை போகும். இரண்டு நாட்களுக்கு இந்த இம்சை தொடர்ந்து இருக்கும். இதனால், உடம்பில் உள்ள தாது உப்புக்கள் குறைந்து, நீர் இழப்பு அதிகமாகி, அடித்துப் போட்டது போல உடம்பு பரிதாபமாகிவிடும். இந்த நிலை ஏற்பட்டால், முதலில் நாம் கண் பதிக்க வேண்டியது உணவு விஷயத்தில்தான்.

மசாலா பொருட்கள், வறுத்து பொரித்த அயிட்டங்கள், பால்... இவற்றை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. ஆறின வெந்நீர் குடிக்கவேண்டும். திரவ உணவுதான் ஏற் றது. நார்ச்சத்தில்லாத பழங்கள், ஜூஸ், இளநீர், மோர், குளூக்கோஸ், அரிசி கஞ்சி, ஜவ்வரிசி கஞ்சி, ஆரோரூட் கஞ்சி போன்றவற்றைக் கொடுத்து வந்தாலே... வயிற்றுப்போக்கை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்" என்று டயட்டீஷியன் சொன்னதை கேட்ட செஃப் ஜேக்கப்,

''வேதனைப்படவே வேண்டாம். நான் தயாரித்திருக்கும் 'டயட் உணவு ரெசிபி'கள் நிச்சயம் வயிற்றுப் போக்கை வர விடாமல் தடுக்கும். காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் இந்த உணவுகளைச் சாப்பிடலாம்'' என்றபடியே அவற்றைப் பட்டியலிட்டார்...

நூடுல்ஸ் சூப்



தேவையானவை: நூடுல்ஸ் - ஒரு பாக்கெட், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், சோள மாவு, வெண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் வெண் ணெயை போட்டு, உருகியதும் நூடுல்ஸ் சேர்த்து வதக்கவும். இதில் தண்ணீர், உப்பு, சர்க்கரை சேர்த்துக் கொதித்ததும், சோள மாவை தண்ணீ ரில் கரைத்து விடவும். கஞ்சி போல் கொதித்ததும் இறக்கவும். நிறைய தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

காலை நேரத்தில் சாப்பிடலாம். வயிறும் நிறைவாக இருக்கும்.

பனானா ஜீரா

தேவையானவை: வாழைப்பழம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), சர்க்கரைப்பாகு - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, தேன் - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கடாயில் நெய் விட்டு, சர்க்கரைப்பாகு சேர்க்கவும். ஏலக்காய்த் தூள் சேர்த்து சர்க்கரைப்பாகு உருகி, கெட்டியாக வந்ததும், வாழைப்பழத் தைப் போடவும். கிண்டவே கூடாது. சர்க்கரைப்பாகு வாழைப்பழத்தின் மேல் பரவி முறுக்கிக் கொண்டு நிற் கும். இதன் மேல் தேனை விட்டு சூடாகவோ (அ) 'ஜில்'லென்றோ இரவு நேரத்தில் சாப்பிடலாம்.

தயிர் பிரெட்

தேவையானவை: பிரெட் - 4 துண்டுகள், கெட்டித் தயிர் - ஒரு கப், இஞ்சி பேஸ்ட் - கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு, வெந்தயம் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தயிரில் இஞ்சி பேஸ்ட், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிரெட் துண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி, தயிருடன் சேர்த்து ஊறவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, தயிரில் கொட்டவும்.

மதியம் அல்லது இரவு நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

ரெசிபிகளை அலசிய 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி, ''இன்ஸ்டன்ட் நூடுல்ஸில் சூப் செய்யும்போது தாது உப்புக்கள் கிடைத்துவிடும். நிறைய மாவுச்சத்தும், ஓரளவு புரதமும், கொழுப்பும் கிடைக்கிறது. நல்ல ரெசிபி!

வாழைப்பழ ஜீராவில் அதிக அளவு பொட்டாஷியமும், மினரல்ஸ§ம், மாவுச்சத்தும் இருக்கிறது. இதில் மலை வாழைப்பழம் சேர்த்தால் இன்னும் நல்லது. சர்க்கரை சோர்வை போக்கி, நல்ல எனர்ஜியை தரும்.

தயிர் பிரெட், டயரியாவுக்கு அற்புதமான ரெசிபி! தயிரில் உள்ள சோடியம், பொட்டாஷியம் மிகவும் கைகொடுக்கும். அதில் உள்ள ப்ரொபையோடிக்ஸ், கெட்ட பாக்டீரியாவை வெளியில் தள்ளி விடும். மற்றபடி மாவுச்சத்து, மின ரல்ஸ் ஆகியவையும் கிடைத்துவிடு வதால் நல்ல எனெர்ஜியைத் தந்து இழப்பை ஈடு செய்துவிடும்.

ஆக மொத்தத்தில், வயிற்றுப் போக்குக்கு தந்துள்ள இந்த மூன்று ரெசிபிகளுமே முத்தானவைதான்!" என்றார்.
-------------------------------------------------------------------------------------------------
நீரிழிவுக்கு தீர்வு... காய்கறியில் !
நீரிழிவு எனப்படும் சர்க்கரை குறைபாடு எதனால் வருகிறது; யாருக்கெல்லாம் வரும்; அதன் அறிகுறிகள் என்னென்ன; கட்டுப்படுத்த என்ன வழிகள் என்று சகலவிதமான கேள்விகளுக்கும் கடந்த இரண்டு இதழ்களில் பதில்களைப் பார்த்தோம்.

அதற்கு ஏற்றாற்போல, உணவு முறையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்... என்னென்ன உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்த்து வருகிறோம்.

"அதுமட்டும்தான்னு நினைச்சுடாதீங்க... சுகரைக் குறைக்கிற சூப்பர் ரெசிபி, கைவசம் இன்னும் நிறைய இருக்கு. நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்... நீங்க டேஸ்ட் பண்ணிக்கிட்டே இருங்க'' என்றபடியே தொடர்ந்தார் 'செஃப்' ஜேக்கப்...

கோதுமை ரவை வெஜிடபிள் உப்புமா


தேவையானவை: உடைத்த கோதுமை - 75 கிராம், மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கோஸ், பீன்ஸ், கேரட், தக்காளி, பச்சைப் பட்டாணி - தலா 10 கிராம், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், பிரியாணி இலை - 1, சின்ன வெங்காயம் - 25 கிராம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உடைத்த கோதுமையை நன்றாக ஊற வைத்து களைந்து கொள்ள வும். கனமான அடிப்பாகம் கொண்ட கடாயில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், சீரகத்தைப் போட்டு வதக்கி, காய்கறிகளை சேர்க்கவும். இதில் 3 கப் தண்ணீர் விட்டு மிளகுத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பிரியாணி இலையைப் போட்டு, கொதித்ததும் உடைத்த கோதுமை ரவையைக் கொட்டி, மிருதுவாக வெந்ததும் இறக்கவும்.

ஸ்டஃப்டு பன்

தேவையானவை: முழு கோதுமை பன் - 1 (50 கிராம் எடை), கோஸ், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், முள்ளங்கித் துருவல் - 25 கிராம், வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், குடமிளகாய் - தலா 10 கிராம், வேகவைத்த கொள்ளு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.




செய்முறை: கோஸை பொடியாக நறுக்கி உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். கோதுமை பன்னை இரண்டாக வெட்டி, மேலாக எண்ணெய் தடவி, வெந்த கொள்ளு, வெங்காயம், தக்காளி, குடமிள காய், வெள்ளரிக்காய், முள்ளங்கித் துருவலை அதன் நடு வில் வைத்து மூடவும். தோசைக் கல்லை காயவைத்து பன்னை அதில் போட்டு இருபுறமும் திருப்பி எடுக்கவும்.

"ஜேக்கப் தந்திருக்கிற இரண்டு ரெசிபியுமே அற்புதம்'' என்று சபாஷ் போட்ட 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி, "கோதுமை ரவை வெஜிடபிள் உப்புமா காலை நேரத்துக்கேற்ற நிறைவான உணவு. ஸ்டஃப்டு பன் மாலை நேரத்துக்கு ஏற்ற மகத்தான டிபன். பொதுவாக, சர்க்கரை நோயாளிகள் பழங்களை மிகக் குறைவாகவும், முழு தானியங்களை அளவோடும், காய்கறிகளை மிக அதிகமாகவும் சேர்த்துக் கொண்டாலே போதும். சந்தோஷ மனநிலையுடன் நீண்ட நாட்கள் நிம்மதியாக வாழ முடியும்'' என்று சொல்லிவிட்டு, கோதுமை உப்புமா மற்றும் ஸ்டஃப்டு பன் ஆகியவற்றின் மூலம் உடலில் சேரும் சத்துக்கள் பற்றியும் சொன்னார். அது...

கோதுமை ரவை வெஜிடபிள் உப்புமா: 60 கிராம் மாவுச்சத்து, 10 கிராம் புரதம், கொழுப்பு நாலரை கிராம், எனர்ஜி 325 கிலோ கலோரி கிடைக்கிறது.

ஸ்டஃப்டு பன்: இதில் மாவுச்சத்து - 27 கிராம், புரதம் - 5 கிராம், கொழுப்பு - 1 கிராம், எனர்ஜி - 135 கிலோ கலோரி உடம்பில் சேர்ந்து நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.
----------------------------------------------------------------------------------------------
எந்த நோய்க்கு என்ன சாப்பாடு? பகுதி 14
கிச்ச்ன் கிளினிக்

"ஆண்டுதோறும் ஒரு இன்ஜெக்ஷன் போட்டுக் கொள்வதன் மூலம், வாழ்நாள் முழுவதும் ஆஸ்டியோபெரோசிஸ் எனும் எலும்பு சம்பந்தமான பாதிப்பினை தவிர்க்கலாம்'' என்ற சென்னை, குரோம்பேட்டை, பார்வதி மருத்துவ மனையின் சீஃப் ஆர்த்தோபீடிக் சர்ஜன் டாக்டர் முத்துக்குமார், ‘யாருக்கெல்லாம் இந்த நோய் எளிதில் தாக்கும்' என்பதையும் விவரித்தார்.


''கால்சியம் நிறைந்த சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாதவர்கள், போதிய உடற்பயிற்சி இல்லாமல் சும்மாவே உட்கார்ந்திருப்பவர்கள், சூரிய வெளிச்சத்தை அறவே பார்க்காதவர்கள் என்று பலரையும் இந்த நோய் நிச்சயம் தாக்கலாம். எலும்பு சேருமிடத்தில் வலி இருக்கும். காலை நகர்த்துதல், அசைத்தல் போன்ற பிசியோதெரபி சிகிச்சை மூலம் எலும்புக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். தினமும், சூரியன் மறையும் பொன்னிற மாலை நேரங்களில் உடற்பயிற்சிகளை செய்வது நல்லது. சூரிய ஒளியின் அல்ட்ரா கதிர்கள் பட்டு, உடம்பில் விட்டமின்-சி நேரடியாகக் கிடைத்துவிடும்'' என்ற டாக்டர்,

''பால், தயிர், எள்ளு, சோயா, பனீர், சீஸ், கேழ்வரகு, பசலைக்கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் ஆஸ்டியோபொரோசிஸ் நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்'' என்று தன் பங்குக்கு கிச்சன் டிப்ஸ்களையும் கொடுத்து அசத்தினார்.

"எந்த நோயும் நம்மை அணுகாமல் இருக்க வேண் டும் என்றால், சத்துக்கள் நிறைந்த உணவை தினமும் சாப்பிட்டு வந்தால் போதும். பனீர், சோயா, எள்ளில் தயாரிக்கப்பட்ட இந்த மூன்று ரெசிபிகளுமே, எலும்புகளையும் ஸ்ட்ராங்காக்கும்'' என்று தன்னுடைய ஏரியாவை ஸ்ட்ராங்க் ஆக்கிய 'செஃப்' ஜேக்கப் ரெசிபிகளின் செய்முறையைச் சொல்ல ஆரம்பித்தார்...

பனீர் சாலட்

தேவையானவை: பனீர் க்யூப்ஸ் - 50 கிராம், மூன்று வித கலர் குடமிளகாய் (நறுக்கியது) - 100 கிராம், கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 5 துளிகள், சாலட் ஆயில், மிளகுத்தூள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, அப்படியே சாப்பிடலாம்.

நொறுக்குத் தீனியை தவிர்த்துவிட்டு, இந்த சாலட் சாப்பிடுவது, சத்துக்கள் நேரடியாக உடம்பில் ஒட்டுவதற்கு உதவும்.

பீஸ் புலாவ்

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 1, பச்சைப் பட்டாணி, நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம் - தலா 100 கிராம், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், கறுப்பு எள் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: எள்ளை வறுத்துப் பொடிக்கவும். குக்கரில் நெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டுத் தாளிக்கவும். பிறகு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி... இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பிறகு... பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர் விட்டு மூடி போடாமல் வேக வைக்கவும். பிறகு, அரிசியைக் களைந்து போட்டு, இரண்டு கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி வெயிட் போடவும். இரண்டு விசில் வந்ததும், அடுப்பை ‘சிம்'மில் வைத்து 2 நிமிடம் கழித்து இறக்கவும். சாதம் லேசான சூட்டில் இருக்கும்போது, எள்ளுப் பொடியைத் தூவி, கிளறி மூடி ஐந்து நிமிடம் வைக்கவும். மதிய நேரத்துக்கு ஏற்ற மகத்தான உணவு இது.

சோயா பீன்ஸ் தால்

தேவையானவை: சோயா பீன்ஸ் - 100 கிராம், மஞ்சள்தூள், மிளகுத்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, சீஸ் - 25 கிராம், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், மாங்காய்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: சோயா பீன்ஸை முந்தைய நாள் இரவே ஊற வைத்து மறுநாள் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, வெங்காயம், பெருங்காயத் தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், வெந்த சோயா பீன்ஸைப் போட்டு, மிளகாய்த்தூள், சீஸ் சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கி, மாங்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும். இதை சப்பாத்தி, பூரி, பிரெட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.

‘டயட்டீஷியன்' கருத்து...

'' 'ஆஸ்டியோபொரோசிஸ்' பாதிப்புக்கு ஏற்ப அற்புதமான ரெசிபிகளை வழங்கியிருக்கிறார் செஃப் ஜேக்கப். இந்த மூன்று உணவிலும் புரதம், கால்சியம், கொழுப்புச் சத்துக்கள் சரியாக அடங்கியுள்ளன. குறிப்பாக, பனீர் சாலட் சாப்பிடும்போது அதன் சத்துக்கள் நேரடியாக நமக்குக் கிடைத்துவிடும். மேலும் விட்டமின்-சி மற்றும் பீட்டா கரோட்டின் இருப்பதால் எலும்புகளைத் திடமாக்கும். கண்களுக்கு மிகவும் நல்லது. ஒரு நாளைக்குத் தேவைப்படும் கால்சியம் சத்து முழுவதும் சோயா பீன்ஸ் தால் மூலம் கிடைத்துவிடுகிறது. 103 மைக்ரோ கிராம் ஃபோலிக் ஆசிட் இருப்பதால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்'' என்கிறார் ‘டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி.
---------------------------------------------------------------------------------------------------------------------------
எந்த நோய்க்கு என்ன சாப்பாடு?
'மஞ்சல் காமாலையை' மடக்கும் கீரை ஸ்ட்யூ!
அடுத்து வரப்போவது மழைக்காலம். இப்போதே அதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. தொற்று நோய்களும்கூட வலம் வரத் தொடங்கிவிட்டன. தொற்று நோய்களில் மிகக் கொடுமையானவை பல இருந்தாலும், மஞ்சள்காமாலை விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆளையே காலி செய்துவிடும்!


அதைப் பற்றி, சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையின் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்கள் துறைத் தலைவர் டாக்டர் முகமது அலி சொல்வதைக் கேட்டுவிட்டு, பிறகு அதற்கான ரெசிபிகளைப் பார்ப்போம்.

''ஹெபடைடிஸ் வைரஸ் (Hepatitis Vairus) என்ற கிருமி மூலம்தான் மஞ்சள்காமாலை நோய் பரவுகிறது. இந்த வைரஸில் ஏ, பி, சி, டி மற்றும் இ A,B,C,D, E) என ஐந்து வகை வைரஸ் உண்டு. ஏ, இ... இந்த இரண்டும் மாசுபட்ட தண்ணீர் மூலமாக பரவக்கூடியது. இந்த வைரஸால் வரும் மஞ்சள்காமாலைக்கு அதிகம் பயப்படத் தேவையில்லை. ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்திவிடலாம். பி, சி, டி வகை வைரஸ்கள் ரத்தம், எச்சில், விந்தணு மூலமாக எளிதில் தொற்றிக் கொள்ளும். இவை மூலம் ஏற்படும் மஞ்சள்காமாலைதான் மிகவும் ஆபத்தானது.

கல்லீரலிலிருந்து சுரக்கும் பித்த நீரின் அளவு, ரத்தத்தில் அதிகமாகி, பித்தப்பை பாதிக்கப்படும். கல்லீரல் சுருங்கி, செயலிழந்துவிடும். மண்ணீரல் வீங்கிவிடும். மூளையைக்கூட மழுங்கடித்துவிடும். மேலும், ரத்தத்தில் சிவப் பணுக்கள் அழிந்து போதல், பித்த நீர்ப் பை மற்றும் பித்த நீர்க்குழாயில் ஏற்படும் அடைப்பு, கல்லீரலை பாதிக்கும் சில நோய்கள், ரத்தத்தில் பித்தநீரின் அதிகரிப்பு, குடிப்பழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் மஞ்சள் காமாலை தாக்கக்கூடும்'' என்ற டாக்டர் முகமது அலி,

''பசியே எடுக்காது. எப்போதும் சோம்பலும், களைப்புமாக இருக்கும். தலைவலி, குமட்டல், வாந்தி ஏற்படும். உடலில் அரிப்பு, எடை குறைந்து போதல், சாதாரண காய்ச்சல், குளிர்காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும். காமாலை முற்றிய நிலையில்... தோல், நகம் மஞ்சளாகவும், கண்களின் வெண்படலத்தில் மஞ்சள் நிறம் படிந்தும், சிறுநீர் மற்றும் மலம் மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்" என்று அதற்கான சில அறிகுறிகளையும் சொன்னார்.

டாக்டர் சொன்னதைக் கேட்டு பயந்துவிட வேண்டாம். உரிய சிகிச்சையோடு... ஒருவேளை இயற்கை உணவு, மற்ற இரண்டு நேரம் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு என்று உணவுக் கட்டுப்பாட்டைக் கடைபிடித்தாலே... மஞ்சள்காமாலையை நிச்சயம் முறியடித்துவிடலாம்.

சரி.. அதற்கான ரெசிபிகளைப் பார்க்கலாமா..?!

கீரை ஸ்ட்யூ

தேவையானவை: ஏதேனும் ஒரு வகைக் கீரை - ஒரு கட்டு, கெட்டி யான தேங்காய்ப் பால் - ஒரு கப், பூண்டு - 1 பல், மிளகு - 2, பெரிய வெங்காயம் - 1, எலுமிச்சைச் சாறு - 5 துளி, ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், வேக வைத்த உருளைக்கிழங்கு - 2 துண்டுகள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கீரையைப் போட்டு, வெங்காயம், உப்பு சேர்த்து வேக வைக்கவும். நன்றாக வெந்ததும், மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்தால், கீரை கெட்டியாகிவிடும். பிறகு... உப்பு, மிளகு, பூண்டு, தேங்காய்ப் பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்ததும் எண்ணெய் சேர்க்கவும். இறக்கிய பிறகு, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.


இது, ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற உணவுகளுக்கு ஏற்ற சைட் டிஷ்!

ஹனி - ஃப்ரூட்ஸ் சாலட்



தேவையானவை: துண்டுகளாக நறுக்கிய ஆப்பிள், பேரிக்காய் போன்ற ஏதேனும் நான்கு பழவகைகள் - தேவையான அளவு, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடலாம்.

மேற்சொன்ன ரெசிபிகள் பற்றி 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி சொல்வதைக் கேட்போமா?

''தேங்காய்ப் பால் சேர்த்து கீரை ஸ்ட்யூ செய்திருப்பது நல்ல ரெசிபி! கால்சியம், மினரல்ஸ், நார்ச்சத்து இதிலிருந்து கிடைத்துவிடுகிறது. இது நல்ல தெம்பு தருவதோடு, மலச்சிக்கல் இல்லாமலும் பார்த்துக் கொள்ளும்.

அதேபோல், ஃப்ரூட் சாலட் சத்துள்ள சூப்பர் ரெசிபி! நீர்ச்சத்துள்ள எல்லாவித பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். கார்போஹைட்ரேட் அதிக அளவு கிடைத்துவிடும். பசி எடுக்காதபோதெல்லாம்கூட சாப்பிடலாம். வாய்க்கு ருசியாக இருக்கும். நல்ல எனர்ஜியை கொடுக்கும்" என்ற டயட்டீஷியன்,

''நோய் உறுதியாகிவிட்டால், முதல் ஐந்து நாட்களுக்கு குருணை அரிசி கஞ்சி, ஜவ்வரிசி கஞ்சி, கரும்புச்சாறு, இளநீர் போன்ற நீராகாரங்களைக் கொடுப்பது நல்லது. அதன் பிறகு, மேற்சொன்ன ரெசிபிகளை எடுத்துக் கொள்ளலாம். ஆரம்பத்திலிருந்தே இந்த ரெசிபிகளை ஃபாலோ செய்தாலும் தப்பில்லை'' என்கிறார்.

பிறகென்ன.. மஞ்சள்காமாலை வந்தால், மறக்காமல் இந்த ரெசிபிகளை கையில் எடுத்து, அதை விரட்டியடியுங்கள்!

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner