Ads Header

Pages


15 March 2012

பாசிப்பருப்பு சமோசா பக்கா டேஸ்ட்! வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம் !
பாசிப்பருப்பு சமோசா பக்கா டேஸ்ட்!

பாசிப்பருப்பு சமோசா
தேவையானவை: அரிசி மாவு, வேக வைத்த பச்சைப் பயறு - தலா ஒரு கப், பாசிப்பருப்பு மாவு, வேக வைத்த உருளைக்கிழங்கு - தலா அரை கப், பச்சை மிளகாய் - 4, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பச்சை மிளகாய், பயறு, உருளைக்கிழங்கு, உப்பு, கரம் மசாலாத்தூள், புதினா, கொத்தமல்லி போட்டு சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும். பூரணம் ரெடி!

அரிசி மாவு, பாசிப்பயறு மாவு இரண்டையும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து, இறுக பிசையவும். இந்த மாவில் சிறிய உருண்டைகளாக செய்து, சப்பாத்தி கல்லில் போட்டு வட்டமாக இடவும். இதனை இரண்டாக வெட்டி கோன் போல செய்து அதனுள் பூரணம் வைத்து, ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டவும். எல்லாவற்றையும் இது போல் செய்து கொண்டு, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பாசிப்பருப்பு சமோசா: மாவுடன் 2 டீஸ்பூன் மைதா, ஒரு டீஸ்பூன் ரவை சேர்த்து செய்தால் ஈஸியாக செய்ய வருவதுடன் சுவையும் வித்தியாசமாக இருக்கும்.
-------------------------------------------------------------------------


தயிர் டைமண்ட்
தேவையானவை: பால் - 5 கப், பால் பவுடர் - 2 கப், சர்க்கரை - 4 கப், மெல்லியதாக சீவிய பாதாம், பிஸ்தா, முந்திரி - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், குங்குமப்பூ - சிறிதளவு, கலர் தேங்காய் துருவல் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - கால் கப், நெய் - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பாலை சுண்டக் காய்ச்சி ஆற வைத்து, இதனுடன் பால் பவுடரை சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கி, சிறிது தயிர் விட்டு உறைய வைக்கவும். அடுப்பில் கனமான கடாயை வைத்து சர்க்கரையைப் போட்டு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். அடுப்பை ‘சிம்’மில் வைத்து, உறை ஊற்றிய தயிரை சர்க்கரைப் பாகில் சேர்த்து கை விடாமல் கிளறவும். இரண்டும் சேர்ந்து கெட்டியாக திரண்டு வரும்போது நெய், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்கவும். ஒரு டிரேயில் லேசாக நெய் தடவி, தயிர்க் கலவையைக் கொட்டி, பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் கலர் தேங்காய்த்துருவலை தூவி, ஒரு தட்டால் சமப்படுத்தவும். சிறிது ஆறியதும் சதுரம் அல்லது டைமண்ட் வடிவில் துண்டுகள் போடவும்.
தயிர் டைமண்ட்: கலர் தேங்காய் துருவல் கிடைக்கவில்லையெனில், தேங்காயை வறுத்து அதில் சிறிது ஃபுட் கலரை சேர்க்கலாம். கால் கப் முந்திரியை அரைத்து சேர்த்து செய்தால் ருசி அமோகமாக இருக்கும்.
---------------------------------------------------------------------------------------

சேமியா மில்க் பேடா

தேவையானவை: சேமியா, சர்க்கரை - தலா ஒன்றரை கப், பால் - கால் கப், இனிப்பு இல்லாத கோவா - ஒரு கப், முந்திரி, திராட்சை - தலா 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், ஜாதிக்காய்த்தூள் - சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன், (அலங்கரிக்க) முந்திரி - சிறிதளவு

செய்முறை: சேமியாவை நெய் விட்டு வறுத்து, சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். கோவாவைப் பிசைந்து சேமியாவுடன் கலக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி, அதில் சர்க்கரையைப் போட்டுக் கரைத்து, சேமியா - கோவா கலவையைப் போட்டு கொதிக்க வைக்கவும். இதில், நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை, ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். கெட்டியாகத் திரண்டு வரும்போது இறக்கி, ஆற வைத்து, எலுமிச்சம்பழ சைஸில் உருட்டிக் கொள்ளவும். இந்த உருண்டைகளை லேசாக தட்டி வடை போல செய்து, நடுவில் நெய்யில் வறுத்த முந்திரியைப் பதிக்கவும்.
சேமியா மில்க் பேடா: ஒரு டேபிள்ஸ்பூன் கசகசா (அ) ரவையை லேசாக வறுத்து சேமியாவுடன் சேர்த்து செய்தால் ருசியாக இருக்கும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner